பலாத்கார வழக்கில் சமரச மையத்தை அணுக பிறப்பித்த உத்தரவு வாபஸ்- ஹைகோர்ட் நீதிபதி தேவதாஸ்
சென்னை: பலாத்கார வழக்கில் குற்றவாளியும் பாதிக்கப்பட்ட பெண்ணும் சமரச மையத்தை அணுக வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் திரும்பப் பெற்றுள்ளார். அத்துடன் பலாத்கார வழக்கின் குற்றவாளி மோகனுக்கு வழங்கிய ஜாமீனையும் ரத்து செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் கொடிக்கலம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை மோகன் என்பவர் 2008 ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த வழக்கில் கடலூர் மகிளா நீதிமன்றம் மோகனுக்கு 7ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவாளி மோகன் மேல்முறையீடு செய்தார். இதனிடையே அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.
மோகன் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ், பலாத்காரம் செய்த மோகனுக்கு ஜாமீன் வழங்கியதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றவாளியும் சமரச மையத்தில் தீர்வு காணலாம் என்கிற ஒரு உத்தரவையும் பிறப்பித்தார்.
இந்த உத்தரவு கடும் விமர்சனத்தை கிளப்பியது. உச்சநீதிமன்றமும் கூட, பலாத்கார வழக்குகளில் சமரச மையத்துக்கு அணுக வேண்டும் என்று உத்தரவிடுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், பலாத்கார வழக்கின் குற்றவாளியும் பாதிக்கப்பட்ட பெண்ணும் சமரச மையத்தை அணுகலாம் என தாம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றுள்ளார். மேலும் குற்றவாளி மோகனுக்கு வழங்கிய ஜாமீனையும் அவர் ரத்து செய்துள்ளார். அத்துடன் குற்றவாளி மோகன் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டுள்ளார்.