மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு- தனியார் பள்ளி தலைமை ஆசிரியர் அதிரடி சஸ்பெண்ட்
தூத்துக்குடி: மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து தூத்துக்குடி மாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் உத்தரவிட்டுள்ளார். அவரை பணி நீக்கம் செய்ய கோரி பொதுமக்கள் பள்ளி தாளாளர் வீட்டை முற்றுகையிட்டதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக ஜெபசிங் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பள்ளியில் படித்து வரும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவிகளிடம் சில்மிஷம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர் மற்றும் பள்ளி தாளாளர் சகாயராஜ்ராயனிடம் புகார் செய்தனர். அதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் விசாரணை நடத்தி பள்ளி தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார். இதுகுறித்து ஆயர் உத்தரவின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் சொக்கன்குடியிருப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் பள்ளி தாளாளர் வீட்டை நேற்று முற்றுகையிட்டனர். புகாருக்கு ஆளான தலைமை ஆசிரியரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக சிலரும் அங்கு வாக்குவாதம் செய்யவே இரு தரப்பினருக்கும் கைகலப்பு உருவானது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தட்டார்மடம் போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதுகுறித்து பள்ளி தாளாளர் சகாயராஜ்ராயன் கூறுகையில், தலைமை ஆசிரியர் மீது இது போன்று பலர் புகார் கூறியதால் அவர தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது. அதன் பிறகே அவர் நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்யப்படுவார் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications