வீட்டின் தரையில் ”திடீர்” வெப்பம் – கிருஷ்ணகிரியில் ஆச்சரியம்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வீட்டின் தரைப் பகுதியிலிருந்து திடீரென வெப்பம் வெளிப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி அடுத்த அக்ரஹாரம் பகுதி முல்லை நகரில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன். ஆவின் ஊழியர். இவர் அப்பகுதியில், கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். வீட்டின் உள்ளே மாடிக்கு செல்ல படிக்கட்டு அமைத்துள்ளார். '

இந்நிலையில் நேற்று காலை, படிக்கட்டு அருகே சுமார் 2 அடி அகலம், 3 அடி நீளம் உள்ள இடத்தில் அதிக வெப்பமாக இருந்தது. இதனால் பயந்து போன ராதாகிருஷ்ணன், உடனடியாக கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், வெப்பம் வெளியேறிய இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த இடத்தில் ஒரு தட்டு மற்றும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்த போது, தண்ணீர் சூடானது. மேலும் தரைக்குள் இருந்து வெப்பம் வெளியேறி வருவது குறித்து புவியியல் துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர்.
இது குறித்து புவியியல்துறை அலுவலர்களிடம் கேட்ட போது, அந்த வீட்டில் தரையின் உள் பகுதியில் மண்ணில் பாஸ்பரஸ், கந்தகம் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது. மண்ணிலிருந்து அது பிரியும் போது வெப்பம் வெளியேறலாம்.
இதனால் அச்சப்பட தேவையில்லை. 2 நாட்களில் வெப்பம் குறைய வாய்ப்பு உண்டு. தொடர்ந்து இந்நிலை நீடித்தால் அந்த பகுதியை தோண்டி, மண்ணை எடுத்து ஆய்விற்கு அனுப்பினால் தான் உண்மையான காரணம் தெரியவரும் என்றனர்.












Click it and Unblock the Notifications