வாட்டி வதைக்கும் அனல் காற்று.. சுட்டெரிக்கும் வெப்பம்- தமிழகத்தின் 9 நகரங்களில் சதமடித்த கோடை வெயில்
சென்னை: தமிழகத்தில் மார்ச் மாதத்திலேயே தொடங்கியுள்ள வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ளது. நேற்றைய பொழுதில் தமிழகம் முழுவதும் பரவலாக பல இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
கோடை வெயில் வழக்கமாக ஏப்ரல் மாதம்தான் உக்கிரம் அடையத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு இந்த மாத தொடக்கத்திலேயே வெயில் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று 9 நகரங்களில் வெயில் சராசரியாக 100 டிகிரியை கடந்தது. ஏப்ரல், மே மாதங்களில் வெயில் 110 டிகிரியை எட்டி விடக்கூடும் என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
கொளுத்தும் வெயில்:
கோடைக்காலத்தின் ஆரம்பத்திலேயே தமிழகத்தில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. மதுரை, சேலம், திருச்சி, பாளையங்கோட்டை உள்ளிட்ட நகரங்களில் வெப்பத்தின் அளவு தொடர்ந்து 100 டிகிரிக்கும் அதிகமாகவே பதிவாகிறது.
அனல் காற்றில் தகிக்கும் சென்னை:
சென்னையைப் பொருத்தவரை பகல் நேரங்களில் வெயிலுடன், அனல் காற்றின் தாக்கமும் ஏற்படுகிறது. இந்நிலையில், நேற்று திருப்பத்தூரில் அதிகபட்சமாக 104 டிகிரியும், பாளையங்கோட்டை, சேலம், மதுரை உள்ளிட்ட நகரங்களில் 102 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
வெப்பப் பிடியில் ஆந்திரா:
தமிழ்நாட்டை விட ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெயில் தாக்கம் மிக கொடூரமாக மாறியுள்ளது. மதிய வேளைகளில் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று மட்டும் கடுமையான வெயில் மற்றும் அனல் காற்றுக்கு 7 பேர் பலியானார்கள்.
வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்):
திருப்பத்தூர் 104
திருச்சி 102
சேலம் 102
பாளையங்கோட்டை 102
மதுரை 102
தருமபுரி 102
வேலூர் 100
தஞ்சாவூர் 100
கோவை 99
திருத்தணி 99












Click it and Unblock the Notifications