திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வளவனாற்றில் வெள்ளப்பெருக்கு.. மழை நீர் ஊருக்குள் புகுந்தது
திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வளவனாற்றில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அருகிலுள்ள கிராமங்களில் மழை நீர் புகுந்தது.
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. டெல்டா பகுதியான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று பகல் பெய்த பலத்த மழையால் உப்பளங்களில் மழை நீர் புகுந்தது. இதனால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றமாக இருப்பதால் வேதாரண்யம், பூம்புகார்,பழையாறு பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக திருத்துறைப்பூண்டி அருகே மேலமருதூர் மேல சேத்தியில் உள்ள வளவனாற்றில் உடைப்பு ஏற்பட்டு ஆற்று நீர் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்தது. இதனால் மேலமருதூர், வடபாதி, தென்பாதி, பிராந்தியக்கரை, மணக்காடு, கரியாப்பட்டினம், தாணிகோட்டகம், பிச்சகொட்டகம், காரமடை உள்ளிட்ட 10 கிராமங்களுக்குள் மழை நீர் புகுந்தது.
தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறையினர் உடைப்பு ஏற்பட்ட பகுதியை மணல் மூட்டைகள் அடுக்கி அடைக்க முயன்றனர். ஆனால் இரவில் பலத்த மழை பெய்ததால் முழுவதுமாக அடைக்க முடியவில்லை. இன்று காலை மீண்டும் அடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, ஆற்றில் மண்டிக்கிடக்கும் கோரை புற்கள், ஆகாயதாமரை ஆகியவற்றை அகற்றி, ஆற்றை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.