அப்பப்பப்பா, என்ன மழை என்ன மழை: மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் சென்னை, கடலூர்
சென்னை: தற்போது மீண்டும் கனமழை பெய்து வருவதால் சென்னை, கடலூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
கடந்த மாதம் 8ம் தேதி முதல் தமிழகத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வந்ததால் சென்னை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாகின. மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தற்போது மீண்டும் கனமழை பெய்து வருகிறது.
6 மாவட்டங்கள்
நேற்று இரவில் இருந்து பெய்து வரும் கனமழையால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. அதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடலூர்
கடந்த மாதம் பெய்த மழையால் வெள்ளத்தில் தத்தளித்த கடலூரில் நேற்று இரவில் இருந்து தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. கடலூரில் பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
படகுகள்
கடலூரில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை தீயணைப்பு படை வீரர்கள் படகுகளில் மீட்டு வருகின்றனர். மாவட்டத்தில் மழைக்கு இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர்.
|
சென்னை
சென்னையில் கேயம்பேடு, வடபழனி, போரூர், குன்றத்தூர், பம்மல், அனகாபுத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மாடம்பாக்கம், செம்பாக்கம், சோழிங்க நல்லூர், வேளச்சேரி, மேடவாக்கம், பெருங்களத்தூர், அடையார், கிண்டி, தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வெள்ளம்
அம்பத்தூர், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. மேலும் அம்பத்தூர் எஸ்டேட், சிட்கோ ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்குள்ளும் நீர் பகுந்துள்ளது. இதனால் பல தொழிற்சாலைகள் இன்று செயல்படவில்லை.