விடிய விடிய கனமழை… சென்னை உள்ளிட்ட 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விடிய விடிய பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் நீடித்து வந்த மேல் அடுக்குச் சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியிருப்பதால், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று காலை நேரத்தில் லேசான தூறலுடன் பெய்த மழை மாலை நேரத்தில் இருந்து கனமழையாக மாறியது. விடிய விடிய இந்த மழை நீடித்தது.

மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டிணப்பாக்கம், மெரினா, அடையார் திருவொற்றியூர், பாரிமுனை, , பூந்தமல்லி, கிண்டி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதோடு, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழை நீடித்து வருகிறது. இதனையொட்டி மூன்று மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
48 மணிநேரத்திற்கு கனமழை தொடர வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளதால், முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளில் மாநகராட்சி இறங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications