தமிழகம், புதுச்சேரியில் இன்னும் 2 நாள்களுக்கு மழை மிரட்டும்!
தமிழகம், புதுச்சேரியில் இன்னும் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருவதால் தமிழகம், புதுச்சேரியில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த 2 நாள்களாக சென்னையை புரட்டி போட்டது. ஆங்காங்கே வெள்ள நீர் இடுப்பளவுக்கு சூழ்ந்து கொண்டது. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அங்குள்ள மக்கள் முக்கியமான பொருள்களை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.
வெளியேற முடியவில்லை
மேலும் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையும் சில இடங்களில் ஏற்பட்டது. மழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில் இலங்கைக்கு தென்மேற்கு வங்க கடல் பகுதியில், நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, சற்று நகர்ந்து, தற்போது, இலங்கைக்கும், தமிழக கடலோர பகுதிகளுக்கும் இடையே நிலை கொண்டிருக்கிறது.
கனமழைக்கு வாய்ப்பு
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் மழை நீடிக்கும். சென்னை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கனமழை முதல் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னைவாசிகள் பீதி
மேலும் அந்தமான் கடலில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சென்னைவாசிகள் மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளனர்.
தண்ணீர் வெளியேற வழியில்லை
கடந்த 2015-ஆம் ஆண்டு வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்படாததால் இந்த ஆண்டு மழைக்கு தண்ணீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கூறியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் புகார் கூறுகின்றனர்.