ஈரோட்டில் கொட்டித்தீர்த்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி
ஈரோடு: ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக வெயில் சுட்டெரித்தது. வெளியே நடமாட முடியாத அளவு வெயில் அடித்தது. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் திடீரென கருமேகக் கூட்டங்கள் சூழ்ந்து, இடி, மின்னலுடன் மழை கொட்டியது.
மேலும் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியதும் ஈரோடு நகரில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கொல்லம்பாளையம், மூலப்பாளையம், நாடார்மேடு, கருங்கல்பாளையம், திருநகர் காலனி, பெரியார் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் வரவே இல்லை.

இதில் ஒரு சில இடங்களில் நள்ளிரவில் 1 மணிக்கு மின்சாரம் வந்தது. மேலும் சில பகுதிகளில் இன்று காலை 9 மணி வரை மின்சாரம் வரவில்லை. இதனால் நேற்று இரவு பொதுமக்கள் தூக்கத்தை இழந்தனர். எனினும் மழை பெய்ததையொட்டி வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
ஈரோட்டில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் ரோட்டோரம் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தது. விளம்பர தட்டிகளும் காற்றில் பறந்தது. ஈரோடு நகரில் மட்டும் நேற்று இரவு 47 மி.மீட்டர் மழை கொட்டியது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 50 மி.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இரவு 9.45 மணியில் இருந்து 10.45 மணி வரை ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் சிவகிரி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் குறிப்பாக விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
முன்னதாக சிவகிரி பகுதியில் மாலை 6 மணியளவில் மேகம் மஞ்சள் கலரில் மஞ்சள் பூசி குளித்தது போல் மிகவும் ரம்மியமாக காணப்பட்டது.
இதை கண்ட மக்கள் கடந்த 2 வாரமாக அடித்த வெயிலுக்கு இன்று இரவு மழை வெளுத்து கட்டப்போகிறது என்று பேசிக்கொண்டனர். அதன்படியே மழை கொட்டி தீர்த்து மக்கள் மனதை குளிர வைத்து விட்டது.
தற்போது சிவகிரி பகுதியில் கரும்பு பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த கரும்புக்கு இந்த மழை பெரிதும் உதவும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். சில இடங்களில் கரும்பு தோட்டத்தில் மழை வெள்ளம் சூழ்ந்திருந்தது.
நாளை அக்னி நட்சத்திரம் முடிவடையும் நிலையில் கோடை மழை பெய்து ஒரே நாளில் வெப்பத்தை விரட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications