கனமழையால் தண்ணீரில் தத்தளிக்கும் கொடைக்கானல்- நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு!
கொடைக்கானல்: கொடைக்கானலில் ஒருவாரமாக கொட்டி தீர்க்கும் கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானலில் கடந்த 10 நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. பிற்பகல் 2 மணிக்கு இது கனமழையாக மாறி நள்ளிரவு வரை நீடித்தது.
இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. அன்னைதெரசா பல்கலைக்கழகம் எதிரே நிலச்சரிவு ஏற்பட்டதில் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இதில் 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அச்சம் அடைந்துள்ளனர்.
அன்னை தெரசா பல்கலைக்கழகம் அருகே பல்வேறு பள்ளங்கள் மூடப்படாததால் கார் ஒன்று அதில் சிக்கிக்கொண்டது. இதனால் பலமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாலும் கொடைக்கானல் வரும் வாகன ஓட்டிகள் மிகவும் மெதுவாக தங்கள் வாகனங்களை ஓட்டி வருகின்றனர்.
இடி, மின்னலுடன் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 8 மணி வரை 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இருந்தபோதும் மீட்புப்பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் அசாதாரண நிலை நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications