சென்னையில் செம மழை.. கடும் குளிர்!
சென்னை: சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. கூடவே கடும் குளிராகவும் இருக்கிறது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மட்டுமல்லாமல் கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மழை பெய்து வந்தது.
சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு பலத்த மழை கொட்டுகிறது. கடும் குளிரும் அடிக்கிறது. இன்று காலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. நகரமே கிட்டத்தட்ட இருண்டு போய்க் காணப்படுகிறது. பல இடங்களில் பலத்த மழையும், சில இடங்களில் லேசான கன மழையுமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மாதவரம், எண்ணூர், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் 4 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம், பொன்னேரி, ரெட்கில்ஸ், கேளம்பாக்கம், தாமரைப்பாக்கம், சென்னை அண்ணாபல்கலைக்கழகம், மகாலிங்கபுரத்தில் 3 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
தற்போது காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக பல கடலோர மாவட்டங்கள், ஒரு சில தென் கடலோர மாவட்டங்கள், மலை மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications