நெல்லையில் பலத்த மழை – விவசாயிகள் மகிழ்ச்சி
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பயிர் சாகுபடிக்காக மழையை எதிர்பார்த்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்யும். இது 1 மாதங்கள் வரை நீடிக்கும். அப்போது குற்றாலத்தில் சீசன் தொடங்கி விடுவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் வெகுவாக இருக்கும்.
அந்த கால கட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கமே தெரியாது. இதமான சூழல் நிலவும். அதன் பிறகு 2 மாத இடைவெளியில் வடகிழக்கு பருவமழை பெய்யும்.
நெல்லையில் மழை
கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இந்தாண்டு ஓரளவு நன்றாக பெய்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை பெய்யாமல் ஏமாற்றம் அளித்தது. இதனால் விவசாயிகள் பாசன வசதி இல்லாமல் தவித்து வந்தனர். அணைகளில் போதிய தண்ணீர் இல்லாதால் பிசான பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவிலலை. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நெல்லை மாவட்டத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.
சாலைகளில் வெள்ளம்
நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், விகேபுரம், கங்கைகொண்டான், சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. பல இடங்களில் பலத்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மழையால் சிரமம்
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் நெல்லை மாநகரில் ஜவுளிகள் வாங்கி குவிந்திருந்த மக்கள் இந்த மழை காரணமாக பெரும் சிரமத்தை அடைந்தனர். ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை இல்லாததால் அங்கு அணைகள் போதிய அளவு நிரம்பவில்லை.
அணை நீர்மட்டம்
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 75.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 306 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 156 அடி கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 83.56 அடியாக உள்ளது. 118 அடி நீ்ர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 50.49 அடியாக உள்ளது. தற்போது பெய்துள்ள மழை விவசாயிகளுக்கு ஆறுதல் அளித்துள்ளது. எனினும் இந்த மழை தொடர்ந்தால் மட்டுமே பிசான பருவ நெல் சாகுபடி செய்ய முடியும் என விவசாயிகள் கூறுகின்றனர்.