சேலத்தில் மழை நீரில் அடித்து செல்லப்பட்ட மாணவன் உடல் மீட்பு.. மக்கள் இயல்பு நிலை தொடர்ந்து பாதிப்பு
சேலத்தில் இன்றும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சேலம்: சேலத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளான். அதேநேரத்தில், வரலாறு காணாத மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் தற்போது வரை வெள்ளத்திலே மிதந்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை 2-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் நேற்று முன்தினம் இரவு வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது. விடிய விடிய இடி மின்னலுடன் பெய்த மழையினால், மாநகரமே வெள்ளக்காடாக மாறியது. அனைத்து பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. 4 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழை காரணமாக, மழைநீர் தாழ்வான பகுதிகளிலிருந்த வீடுகளுக்குள் புகுந்தது. இதில் கழிவுநீரும் சேர்ந்து கொண்டதால், குடியிருப்பு பகுதி மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். வீட்டிலுள்ள பொருட்களும் சேதமடைந்த நிலையில் அனைவருமே தூங்காமல் சாலைகளில் நிற்கும் அவலம் ஏற்பட்டது.

தாழ்வான பகுதிகளான அம்மாபேட்டை, கிச்சிபாளையம், நாராயணாநகர், பச்சப்பட்டி, கருங்கல்பட்டி, புலிக்குத்திதெரு, சங்கர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் புகுந்தது. அதேபோல சீலநாயக்கன்பட்டி, பெரமனூர் பகுதிகளில் உள்ள வீடுகளிலும் மழை நீர் புகுந்து மக்கள் சிரமத்திற்கு ஆளாயினர். பெரும்பாலான இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.
ராஜவாய்க்கால் ஓடையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது நைட் ஷோ படம் முடித்து உறவினர்களுடன் முகமது ஷாத் என்ற சிறுவன் வீடு திரும்பி கொண்டிருந்தான். ஓடையை கடக்க முயன்றபோது தவறி விழுந்துவிட்டான். இதனால் பதறிபோன உடன் வந்தவர்கள் அவனை காப்பாற்ற முயற்சித்தும், பெருக்கெடுத்த வெள்ளத்தில் சிறுவன் அடித்து செல்லப்பட்டான். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்களும் அப்பகுதி மக்களும் மாவட்ட ஆட்சியர் ரோகிணியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநகராட்சியின் அலட்சியம் காரணமாக சிறுவன் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டினர். அத்துடன், அடித்து செல்லப்பட்ட சிறுவனை தேடும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறையினர் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கினர். ஆனாலும் பல பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற முடியவில்லை. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற தீயணைப்பு துறையினரும் நேற்று முதல் போராடி வருகின்றனர்.
அதேபோல, பல பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன போக்குவரத்துகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.தண்ணீர் வீட்டிற்குள் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவும் பலர் வீட்டினுள் தண்ணீர் புகுந்ததால் தூங்க முடியாத அவலம் ஏற்பட்டது.
இந்நிலையில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தேடி வந்தனர். இந்நிலையில் 24 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு துறையினர் அவனது உடலை மீட்டுள்ளனர்.
இதுபோன்ற மழை சேலத்தில் கடந்த 1962ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பெய்ததாகவும், அப்போது அது 125.5 மி.மீ., பதிவானதாகவும், அதுவே அதிகபட்ச மழை என்றும் கூறப்படுகிறது. 56 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத வகையில் நேற்றுமுன்தினம் கொட்டி தீர்த்துள்ளது. அன்றைய தினம் 133.8 மி.மீ., மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications