கோவை, தாராபுரத்தில் கொட்டும் கனமழை வாழப்பாடியில் ஆலங்கட்டி மழை
சேலம்: அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் வறுத்தெடுத்து வரும் நிலையில், கோவை சுற்றுவட்டாரப்பகுதிகளிலும், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலும் இடியும் மின்னலுமாய் கனமழை கொட்டியதால் அங்கு வெப்பம் குறைந்து குளுமை பரவியுள்ளது. வாழப்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வெப்பசலனம் காரணமாக தென்தமிழகத்தில் இன்று லேசான மழையை எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால் அதற்கான அறிகுறிகளே இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஒருமணிநேரம் மழை கொட்டியது. ஆலங்கட்டியும் கொட்டியதால் மக்கள் உற்சாகத்துடன் ஆலங்கட்டியை சேகரித்தனர். இதேபோல சின்னமநாயக்கன் பாளையம், கோலாட்டுக்கோம்பை, பள்ளதாதனூர், நீர்முள்ளிக்குட்டையிலும் ஆலங்கட்டி மழை பெய்தது. வெயில் கொளுத்திய நிலையில் மழை பெய்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோவையில் கனமழை
இதேபோல கோவையில் உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் பகுதிகளில் கடந்த அரைமணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது. காலைமுதல் வெயில் கொளுத்திய நிலையில் தற்போது கொட்டிய மழையால் குளுமையான காற்று வீசுவதால் கோவைவாசிகள் மகிழ்ச்கியடைந்துள்ளனர்.
தாராபுரத்தில் இடியுடன் மழை
இதேபோல திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இடியும் மின்னலுமாய் மழை கொட்டியது. அரைமணி நேரத்திற்கும் மேல் மழை கொட்டியதால் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது.
குளுகுளு வால்பாறை
வால்பாறை பகுதியில் தற்போது கோடைமழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறை பகுதியில் வெப்பம் குறைந்து இதமான காலசூழ்நிலை நிலவிவருகிறது. மேலும் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடையின் வெப்பம் அதிகரித்து தேயிலைச் செடிகளை சிவப்பு சிலந்தி, தேயிலைக் கொசு ஆகியவை தாக்கி தேயிலை உற்பத்தி பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும்.
தேயிலை மகசூல் அதிகம்
தற்போது பெய்துவரும் கனமழையினால் சிவப்பு சிலந்தி பூச்சி உள்பட பல்வேறு பூச்சிகளின் தாக்குதல் குறைந்து தேயிலை உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தேயிலைத் தோட்ட நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே போல கோடையிலும் மழை பெய்து வருவதால் வால்பாறைக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.