மழையால் மிதக்கும் சென்னையின் புறநகர்: இன்றும் கனமழை பெய்யுமாம்!
சென்னை: சென்னையில் தொடரும் கன மழையால், புறநகர் பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன. தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் குடியிருப்போர் வீடுகளை விட்டு வெளியேற முடியவில்லை.
வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டிருந்த சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் தொடரும் மழையால், புறநகர் பகுதிகளான வேளச்சேரி, திருவொற்றியூர், மாதவரம், அம்பத்தூர் போன்ற பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்தப்பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், தொடர்மழையால், பெரும்பாலான நகர்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ராதாகிருஷ்ணன் நகர் உள்ளிட்ட பல நகர்களில் வசிப்போர், வீடுகளிலிருந்து வெளியே வர முடியாதபடி முழங்கால் உயரத்திற்கு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், வீடுகளில் இருந்து சிலர், வெளியேறி வருகின்றனர். இதனால், திருவொற்றியூர் மேற்கில் வசிப்போரின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

தொடர் மழை
கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஓட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்நிலையில், வியாழக்கிழமை காற்றழுத்த தாழ்வு நிலை மறைந்தது. ஆனால், வளிமண்டல மேல் அடுக்கில் சுழற்சி உருவானது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்தது. சென்னையை பொறுத்தவரை நேற்று காலை திடீரென வெயில் அடிக்க தொடங்கியது. பின்னர், மேகமூட்டம் ஏற்பட்டு மதியம் 12 மணி முதல் பல இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு வரை விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது.

வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்
இதனால் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலை எது, கால்வாய் எது என்று தெரியாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டனர். அண்ணாநகர், திருவான்மியூர், அம்பத்தூர், வடபழனி ஆகிய பேருந்து நிலையங்கள் மோசமான பராமரிப்பில் கிடக்கின்றன. பள்ளமான சாலைகளை கொண்ட, இந்த பேருந்து நிலையங்களில், மழைநீர் வெளியேற வடிகால்வாய் வசதியில்லாமல் தேங்கிஉள்ளது.

இன்றும் மழை நீடிக்கும்
இந்நிலையில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் இன்றும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியுள்ளதாவது: கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஓட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகம் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகோடி மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் அதிக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.
மேலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதியில் வடமேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்திலும், தென் தமிழக கடலோர பகுதிகளில் தென்மேற்கு திசை யில் இருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும் பலமான தரைக்காற்று வீசும் என்று மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

36 மரங்கள் சாய்ந்தன
நேற்று வெளுத்து வாங்கிய மழைக்கு ஏழு மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடந்த மூன்று தினங்களில், மொத்தமாக, 36 மரங்கள் விழுந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் தங்க, அனைத்து மண்டலங்களில், நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மரத்தடியில் நிற்காதீங்க
மழை பெய்யும்போது இடியும், மின்னலும் பலமாக ஏற்படுவதால் பொதுமக்கள் யாரும் பெரிய மரங்களுக்கு அடியிலும், மரங்கள் நிறைந்த பகுதியிலும் நிற்க வேண்டாம். மேலும், ஒற்றையாக நிற்கும் மரங்களையே மின்னல் பெருமளவில் தாக்கி வருகிறது, எனவே அங்கு நிற்பது ஆபத்தானது என்றும் மரத்தடியில் ஒதுங்கவேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications