மதுரையில் இரவு முழுவதும் விட்டு விட்டு வெளுத்து வாங்கிய கனமழை
மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்தது.
மதுரை: மதுரை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு விட்டு விட்டு நல்ல மழை பெய்தது.
மதுரையில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பகல் நேரங்களில் நகர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. நிதானமாக பெய்த மழையை மதுரை மக்கள் ரசித்தனர். அதேநேரம் சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கியது.
பெரியார் நிலையம், சிம்மக்கல், காளவாசல், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. காமராஜர் சாலை, கோரிப்பாளையம், அண்ணா நகர் சாலையில் தேங்கிய மழைநீரால் வாகனங்கள் வேகமாக செல்வதற்கு சிரமப்பட்டனர்.
இதனிடையே மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. காளவாசல், பழங்காநத்தம், ஆரப்பாளையம், நாகமலை புதுக்கோட்டை, செக்கானூரணி உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. லேசான மழைக்கு கூட தாங்காத மதுரை சாலைகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளதால் ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் தேங்கி காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.