இலங்கை அருகே மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அருகே வானில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என்றும், தமிழகத்தில் வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக லேசானது முதல் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் சேலம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது.
திருச்சியில் தில்லை நகர், துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரம் கனமழை பெய்தது. கொடைக்கானலில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேல்மலை, கீழ்மலை பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications