தீபாவளி.. சொந்த ஊர் செல்ல பஸ், ரயில்களில் அலை மோதும் கூட்டம்
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து பல்லாயிரக்காண பயணிகள் பஸ், ரயில் நிலையங்களில் திரண்டதால் கூட்டம் அலைமோதியது.
சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி சொந்த ஊர் செல்ல பஸ், ரயில்களில் பயணிகளின் கூட்டம் சென்னையில் அலைமோதியது.
சென்னையில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று வர எதுவாக தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 11 ஆயிரத்து 225 சிறப்பு பஸ்கள் உள்பட தமிழகம் முழுவதும் 21 ஆயிரத்து 289 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி தீபாவளி சிறப்பு பஸ்களின் சேவை நேற்று முன்தினம் தொடங்கியது. சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்று முன்தினம் காலை முதலே மதுரை, நெல்லை, திருச்சி, நாகர்கோவில், சேலம், கோவை, தூத்துக்குடி வேளாங்கண்ணி, ராமநாதபுரம், காரைக்குடி உள்பட பல்வேறு வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் அண்ணாநகர் (மேற்கு), கோயம்பேடு மாநில தேர்தல் ஆணைய அலுவலக பஸ் நிலையம், தாம்பரம் சானடோரியம் அண்ணா பஸ் நிலையம் (மெப்ஸ்), பூந்தமல்லி ஆகிய 4 தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த பஸ் நிலையங்களுக்குச் செல்ல நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு மாநகர பஸ்களும் விடப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு நாட்களாக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வெளியூர் சென்றுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் சென்னையில் வசிப்பவர்கள் குடும்பம் குடும்பமாக சொந்த கிளம்ப துவங்கியுள்ளனர். இதனால் சென்னை கோயம்பேடு உள்ளிட்ட தற்காலிக பேருந்து நிலையங்களில் எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளிக்கிறது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்தின் 9 நடைமேடைகளில் 77 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில்களில் கூட்டம்:
வழக்கமான ரயில்களில் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு இடங்கள் தீர்ந்து விட்டாலும், முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளில் பயணிக்க வாய்ப்பு உள்ளதால் சென்ட்ரல், எழும்பூர் ரயில்நிலையங்களில் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. சென்னையிலிருந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாக்குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கடுமையான கூட்டம் அலைமோதியது.