மூளைச்சாவு அடைந்த வாலிபரை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய மருத்துவமனை: ஓசூரில் பரபரப்பு
ஓசூர்: ஓசூரில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் இறந்துவிட்டதாக நினைத்து அவரை பிரேத பரிசோதனை கூடத்திற்கு மருத்துவர்கள் அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த முனியப்பாவின் மகன்கள் திம்மப்பா (25), மனோஜ் (17). வெள்ளிக்கிழமை அன்று சகோதரர்கள் இருவரும் பைக்கிற்கு பெட்ரோல் போட ஓசூர்-பெங்களூர் தேசிய நெுஞ்சாலையில் உள்ள பேரண்டப்பள்ளி பெட்ரோல் பங்கிற்கு சென்றனர். அப்போது அங்கிருக்கும் பேருந்து நிலையம் அருகே அவர்கள் பைக் மீது எதிரே வந்த பைக் மோதியது.

இந்த விபத்தில் திம்மப்பாவின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. உடனே ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நள்ளிரவில் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
திம்மப்பாவின் உறவினர்கள் அவர் இறந்ததாக நினைத்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு கொண்டு வந்தனர். திம்மப்பாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அவரின் உறவினர்கள் போக்குவரத்து புலானாய்வு பிரிவு போலீசாரை அணுகி கடிதமும் வாங்கிவிட்டனர். அந்த கடிதத்தை பெற்றுக் கொண்ட மருத்துவர்கள் திம்மப்பாவை சோதிக்காமலேயே அவரை பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பி வைத்துவிட்டனர்.
பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு செல்கையில் அவர் உயிருடன் இருப்பதை பார்த்த தலைமை காவலர் போலீசார் மற்றும் மருத்துவர்களிடம் இது குறித்து தெரிவித்தார். இதையடுத்து திம்மப்பாவை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். பின்னர் மீண்டும் பெங்களூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனில்லாமல் பலியானார்.












Click it and Unblock the Notifications