கட்டாய ஹெல்மெட்டுக்கு எதிர்ப்பு- மனு மீதான தீர்ப்பினைஒத்தி வைத்தது சென்னை ஹைகோர்ட்!
சென்னை: தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற வழக்கினை மறு ஆய்வு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பினை தள்ளி வைத்துள்ளது உயர்நீதிமன்றம்.
தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அரசாணை பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து இந்த ஹெல்மெட் அணியவேண்டும் என்பது தொடர்பான வழக்கு ஹைகோர்ட் நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கட்டாய ஹெல்மெட் அணியவேண்டும் என்று உத்தரவிட ஹைகோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "ஹெல்மெட் அணிவது தொடர்பான உத்தரவு பிறப்பிக்க மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது. அந்த மாநில அரசின் அதிகாரத்தில், தலையிடும் விதமாக ஹைகோர்ட் உத்தரவிடமுடியாது.
தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் உத்தரவை 1975 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசர நிலை பிரகடனம்போல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று உள்துறை செயலாளர், டி.ஜி.பி ஆகியோர் உத்தரவிட வேண்டும் என்று இந்த ஹைகோர்ட் உத்தரவிட அதிகாரம் இல்லை. மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண்கள், குழந்தைகள் ஹெல்மெட் அணிய மிகவும் சிரமப்படுகிறார்கள். 2 கிலோ எடை கொண்ட ஹெல்மெட்டை எப்படி குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடியும்.
ஹெல்மெட் எப்படி இருக்கவேண்டும் என்ற வடிவத்தை மத்திய அரசு இன்னும் இறுதி செய்யாமல் இருக்கும்பட்சத்தில் கட்டாய ஹெல்மெட் உத்தரவை எப்படி அமல்படுத்த முடியும். இந்த உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. கட்டாய ஹெல்மெட் உத்தரவினால் தமிழகத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் ஒன்றரை கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த ஹைகோர்ட்டின் உத்தரவை மறுஆய்வு செய்யவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் போடவேண்டும் என்று தான் சட்டம் சொல்கிறது. வண்டியை ஓட்டுபவர்கள் மட்டுமல்ல, பின்னால் உட்கார்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணியவேண்டும். விபத்து ஏற்படும்போது ஆண், பெண் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் பாதிப்பு ஏற்படுகிறது. விபத்தில் மக்கள் பலியாவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க சொல்கிறீர்களா" என்று கேள்வி எழுப்பினார். பின்னர் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications