மக்களே உஷார்.. மதுரையில் இன்று முதல் 'ஹெல்மெட்' கட்டாயம் !
மதுரையில் இன்று முதல் இரு சக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும்.
மதுரை: மதுரையில் இன்று முதல் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும். தவறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து, ஆவணங்கள் பறிமுதல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை நகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரையில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் எவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்கவேண்டும். தலைக் கவசம் இன்றி பயணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இதன்மூலம் குற்றத்துக்கு ரூ.100, 2-வது முறை குற்றத்துக்கு ரூ. 300 அபராதம் விதிக்கப்படும்.
விபத்துக்கள் நடக்கும் போது, தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்வோர் அதிகம் உயிரிழக்கின்றனர். தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் செல்வது 1.7.2015 முதல் உயர் நீதிமன்றத்தால் கட்டாயமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தொடக்கத்தில் மதுரை மாநகரில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் அனைவரும் தலைக்கவசம் அணிந்து சென்றனர். இது படிப்படியாக குறைந்தது.
கடந்த 2016-ல் மதுரை மாநகரில் விபத்து்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 225 பேர். இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்து இறந்தவர்களில் 90 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியாதவர்கள். ஆகவே தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இரு சக்கர வாகனத்தில் நீங்கள் பயணம் செய்வது மட்டுமின்றி, உங்களின் உற்றார், உறவினர்களும் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்ய அறிவுரை வழங்கவேண்டும்.
2016-ல் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற 1,34, 954 பேர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் அனைவரும் தலைக்கவசம் அணிவதை உறுதி செய்யும் பொருட்டு மதுரையில் இன்று முதல் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் அனைவர் மீதும் உயர் நீதிமன்ற உத்தரவுபடி வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல் செய்தல், ஓட்டுநர் உரிமம் ரத்து உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்