18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த ஹைகோர்ட்!
சென்னை: 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் உத்தரவுக்கு தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் மனு கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து 19 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சட்டசபை தலைவர் தனபாலிடம் புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் 19 எம்.எல்.ஏ.க்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
18 பேர் தகுதி நீக்கம்
இதனிடையே, கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதாக திடீரென தெரிவித்து அணி மாறினார். இதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டார். 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் அரசிதழிலும் வெளியிடப்பட்டு அவர்கள் வகித்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
துஷ்யந்த் தவே ஆஜர்
இதை எதிர்த்து ஹைகோர்ட்டில் 18 பேர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இன்று நீதிபதி துரைசாமி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தினகரன் தரப்பினருக்காக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி வாதாடினார்.
குற்றச்சாட்டு
தகுதி நீக்கம் உத்தரவு தங்களுக்கு நேரில் தரப்படவில்லை என்றும், பதிலளிக்க அவகாசம் தரப்படவில்லை என்றும், தங்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி அரசை காப்பாற்ற சபாநாயகர் முயல்வதாகவும், 18 பேரின் வழக்கறிஞரான துஷ்யந்த் தவே வாதிட்டார். இதை கேட்டறிந்த நீதிபதி, மறு உத்தரவு வரும்வரை, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டிப்பு செய்தார்.
இடைக்கால தடை இல்லை
அதேநேரம், 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவில் இப்போது தலையிட்டு அதற்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார். ஆனால், 18 பேர் தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிக்கவும், அந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தவும் தடை விதித்துள்ளார் நீதிபதி.
தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் முதல்வர், பேரவை செயலாளர், சபாநாயகர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார் நீதிபதி.