டி.என்.பி.எஸ்.சி தேர்வு வெளிப்படையாக இருக்கவேண்டும்- ஹைகோர்ட்
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
எழுத்து தேர்வில் கலந்துகொண்டவர்களின் மதிப்பெண் பட்டியலை வெளியிட்ட பின்னரே, நேர்முக தேர்வு நடவடிக்கையை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

தொழிற்சாலை சார்பு பணி உதவி பொறியாளர் தேர்வை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடத்தியது. இந்த தேர்வு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.விஜய் கீர்த்தி, பி.தமிழரசி ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தமிழக தொழில்துறையின் உதவி என்ஜினீயர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வு நடத்தியது. இந்த தேர்வின் மதிப்பெண் பட்டியலை வெளியிடாமல், சான்றிதழ் சரிபார்க்கும் பணிக்கு வரவேண்டிய விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியலை கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. அந்த பட்டியலில் எங்கள் பெயர் இருந்தது.
இதன்பின்னர், சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் கலந்துகொண்டவர்களில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றார்கள் என்ற விவரங்களை வெளியிடவில்லை. ஆனால், 82 பேரை மட்டும் நேர்முக தேர்வுக்கு வரும்படி அழைப்பு விடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதில் 80 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 80 பேருடைய மதிப்பெண் விவரங்களை மட்டும் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. எனவே, தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.அரிபரந்தாமன் தனது உத்தரவில்,
இந்த வழக்கு விசாரணையின்போது, டி.என்.பி.எஸ்.சி. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எழுத்து தேர்வு மதிப்பெண் பட்டியலை தாக்கல் செய்தார். அதில், நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் அதிக மதிப்பெண் எடுத்திருந்தனர். அதை மனுதாரர் வக்கீல்களும் ஒப்புக்கொண்டார். எனவே, இந்த வழக்கு தோல்வியடைந்துவிட்டது.
அதே நேரத்தில், டி.என்.பி.எஸ்.சி. மேற்கொண்டுள்ள இந்த தேர்வு நடைமுறை அதிருப்தி அளிக்கிறது. பொதுவாக எழுத்து தேர்வு முடிந்த பின்னர், அந்த தேர்வின் மதிப்பெண் விவர பட்டியல்களை முதலில் வெளியிட வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குருப் 4 தேர்வில் அதிக நபர்கள் எழுத்து தேர்வில் கலந்துகொள்கிறார்கள். அந்த குருப் 4 எழுத்து தேர்வின் மதிப்பெண் விவரங்களை வெளியிடும்போது, உதவி பொறியாளர் பதவிக்கு குறைவான எண்ணிக்கையில் கலந்துகொண்டவர்களின் மதிப்பெண் பட்டியலை வெளியிடாதது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால், தேர்வில் கலந்துகொண்டவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகத்தின் நடவடிக்கையின் மீது சந்தேகம் ஏற்படுகிறது. அதனால், அவர்கள் இந்த நீதிமன்றத்தின் கதவினை தட்டுகின்றனர். இதை தவிர்க்க வேண்டும் என்றால், டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வு நடவடிக்கை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.
எனவே, இனிவரும் காலங்களில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் எழுத்து தேர்வினை நடத்தினால், அந்த தேர்வின் மதிப்பெண் பட்டியலை வெளியிட்ட பின்னரே, நேர்முக தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். மேலும், நேர்முக தேர்வு நடத்துவதற்கு முன்பு சான்றிதழ் சரிபார்க்கும் நடவடிக்கையை மேற்கொள்வது என்பது தேவையற்றது. சான்றிதழ் சரிப்பார்க்கும் பணி தேர்வின் இறுதி கட்டத்தில்தான் மேற்கொள்ள வேண்டும். எனவே உதவி பொறியாளர் பதவிக்கு எழுத்து தேர்வு எழுதிய அனைவரது மதிப்பெண் விவரங்களையும் உடனடியாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட வேண்டும். இந்த வழக்கை முடித்துவைக்கிறேன் என்று கூறி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications