நீட் தேர்வுக்கு எதிராக செ.19-ல் திருச்சியில் டிடிவி தினகரன் கூட்டம் நடத்த கோர்ட் அனுமதி!
நீட் தேர்வுக்கு எதிராக செப்டம்பர் 19ஆம் தேதி திருச்சியில் கூட்டம் நடத்த டிடிவி தினகரன் தரப்புக்கு ஹைகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை: நீட் தேர்வுக்கு எதிராக செப்டம்பர் 19ஆம் தேதி திருச்சியில் கூட்டம் நடத்த டிடிவி தினகரன் தரப்புக்கு ஹைகோர்ட் கிளை அனுமதி வழங்கியுள்ளது
நீட் தேர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் போன அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டும், நீட் தேர்வை எதிர்த்தும் டி.டி.வி,தினகரன் தலைமையில் பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டது. முதலில் செப்டம்பர் 12-ம் தேதி, சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, செப்டம்பர் 16-ம் தேதி திருச்சி உழவர் சந்தையில் கண்டனக் கூட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.
இதற்காகத் தினகரன் தரப்பிலிருந்து, திருச்சி மாநகராட்சி மற்றும் மாநகரக் காவல் ஆணையர் ஆகியோரிடம் மனுக்கொடுக்கப்பட்டது. அன்றைய தேதியில், உழவர் சந்தை மைதானத்தில், வேறு ஒரு நிகழ்ச்சி நடக்க உள்ளதால், அனுமதி மறுக்கப்படுவதாக மாநகராட்சி சார்பில் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து வரும் 19ஆம் தேதி கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு இரண்டு முறை திருச்சி மாநகராட்சி சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது,
இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி கோரி தினகரன் தரப்பு மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருச்சியில் செப்டம்பர் 19-ம் தேதி டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.