ஆசிரியர்கள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு- பள்ளிக் கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!
சென்னை: தமிழக பள்ளிக் கல்வித்துறை மீது ஆசிரியர்கள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், நீண்ட காலமாக பணி செய்யும் ஆசிரியர்களுக்கு ஸ்பெஷல் கிரேடு அந்தஸ்து வழங்க கடந்த 2011 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அக்னிகோத்ரி, சசிதரன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சபீதா நேரில் ஆஜரானார்.
நேரில் ஆஜராக வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்று தெரியுமா என்றும், கல்வித்துறை மீது எத்தனை நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் உள்ளன எனத் தெரியுமா என்றும் சபீதாவிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உத்தரவை அமல்படுத்த விருப்பம் இல்லை என்றால் மேல்முறையீடு செய்யாதது ஏன் என்றும் கேட்டனர்.
அரசாணையின்படி அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டதாக சபீதா கூறியதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.