அதிகாரிகள் மிரட்டல் - சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண் ஊழியர்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் ஊழியர்களை அதிகாரிகள் மிரட்டியதால் அவர்கள் சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவில்பட்டி அருகே புதுக்கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் பணிபுரிந்து வருபவர் கலாநிதி. இந்நிலையில் மாலை வட்ட வழங்கல் அலுவலர் நாகேந்திரன், வருவாய் ஆய்வாளர் செல்லபாண்டியன் ஆகியோர் கலாநிதி பணியாற்றும் கடைக்கு சென்று பொருட்கள் மற்றும் விற்பனையை ஆய்வு செய்தனர்.
இரவு 8 மணி வரை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதால் கலாநிதி அதிகாரிகளிடம் தனது கணவர் வெளியூர் சென்றுள்ளதால் வீட்டுக்கு சென்று குழந்தைகளை கவனிக்க வேண்டும். அதனால் வீட்டுக்கு செல்ல அனுமதிக்குமாறு கூறியுள்ளார்.
இதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் உடனடியாக தனது சக ரேசன் கடை ஊழியர்களுக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து வந்து அதிகாரிகளிடம் கேள்விகளை எழுப்பினர்.
கூட்டுறவு சம்மேளனத்தை சேர்ந்த அருணாசலபெருமாள் உள்ளிட்டோர் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அது வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் இரவு 9 மணிக்கு கலாநிதியை அதிகாரிகள் விடுவித்தனர். அதன் பின் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்ற கலாநிதி வேலை நேரம் முடிந்த பின் பெண் என்றும் பாராமல் இரவு 9 மணி வரை மிரட்டியும், வேலையை காலி செய்து விடுவேன் என்று மிரட்டியும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அதிகாரிகள் இருவர் மீதும் புகார் கொடுத்தார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஊழியருக்கு ஆதரவாக கோவில்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட 120 க்கும் மேற்பட்ட ரேசன் கடை ஊழியர்கள் திரண்டு சப் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications