ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்.. இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கைது!
நாகப்பட்டினம்: ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருளை நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் வேளாங்கண்ணியில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகையில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு விலை உயர்ந்த போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு சனிக்கிழமை கிடைத்த தகவலையடுத்து வேளாங்கண்ணிக்கு சென்றனர்.

தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், வேளாங்கண்ணி பேராலய பகுதியில் கண்காணித்து கொண்டிருந்தனர். அப்போது, பார்க்கிங்கில் ஒரு காரில் இருந்த மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் அவர்கள், நாகையை சேர்ந்த இந்து மக்கள் கட்சி நாகப்பட்டினம் மாவட்ட வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் (40), பூம்புகாரை சேர்ந்த ஆனந்தராஜ் (33), வேதாரண்யத்தை சேர்ந்த முருகன் (எ) காஞ்சிநாதன் (31) ஆகியோர் என்பதும், அவர்கள் ரூ.6 கோடி மதிப்பிலான 2 கிலோ மெஸ்கலின் என்ற உயர் ரக போதைப் பொருளை இலங்கைக்கு படகு வழியாக கடத்த இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் தேசிய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்கள் 3 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த 3 பேரிடமும் இருந்த போதைப் பொருளை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட அந்த போதைப் பொருளின் மதிப்பு ரூ.6 கோடி இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications