இந்து முன்னணி பிரமுகருக்கு அரிவாள் வெட்டு.. திண்டுக்கல்லில் சாலை மறியல் !
திண்டுக்கல்: இந்து முன்னணி பிரமுகர் சங்கர் கணேஷ் என்பவரை நேற்று இரவு மர்மநபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர்கணேஷ் என்பவர் நேற்று இரவு 9.30 மணியளவில் மூன்று மர்மநபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்ட அப்பகுதியினர் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் மற்றும் சங்கர் ஆதரவாளர்கள் திண்டுக்கல்லில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. பேருந்து நிலையத்தில் இருந்த அரசுப் பேருந்துகளையும் அடித்து நொறுக்கினர். சாலை மறியல் போரட்டத்திலும் ஈடுபட்டனர். இச்சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.