கொடுமுடியில் இந்து கோவில் அருகே தேவாலயம் கட்ட இந்து முன்னணி கடும் எதிர்ப்பு
ஈரோடு: கொடுமுடியில் இந்து கோவில் அருகே கிறிஸ்தவ தேவாலயம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் புகழ்பெற்ற கொடுமுடிநாதர் (மகுடீஸ்வரர்) கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா என மூன்று தெய்வங்கள் அபூர்வமாக உள்ளதால் தமிழகத்தில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கோவிலுக்கு அருகிலேயே தேவாலயம் கட்ட ஒரு தரப்பினர் முடிவு செய்து அதற்கான பூர்வாங்க பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தகவல் அறிந்த இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் பூசப்பன் தலைமையில் அதன் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
ஈரோடு அருகே கொடுமுடியில் அமைந்துள்ள மகுடீஸ்வரர் கோவில் அருகே புதிதாக கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று கட்டப்படுகிறது. இது, (மகுடீஸ்வரர்) கோவில் தேர் பாதையிலேயே அமைந்துள்ளது. மேலும் மகுடீஸ்வரர் கோவிலில் இருந்து 200 அடி தூரத்துக்குள் அமைந்துள்ளது.
முறையான அனுமதி இல்லாமல் இந்த ஆலயம் கட்டப்படுகிறது. இரு வெவ்வேறு மத வழிபாட்டுத் தலங்கள் அருகருகே அமைந்தால் எதிர்காலத்தில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, புதிய தேவாலயம் அமைவதை தடுத்து நிறுத்த மாவட்ட கலெக்டர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பகுதியில் இரு மதத்தினருக்கும் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications