அத்தனை இந்துக்களும் திமுகவை விட்டு வெளியேற வேண்டும்.. எச். ராஜா அதிரடி
சென்னை: மு.க.ஸ்டாலினின் இணையதளத்தில் வெளியான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்தி, அவருக்குத் தெரியாமல் வெளியாகி விட்டது என்று கூறி திமுக திரும்பப் பெற்றுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்து திமுகவில் உள்ள அத்தனை இந்துக்களும் வெளியேற வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. அதையொட்டி முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இதுபோல வாழ்த்துச் சொல்வதை வழக்கமாக கொண்டிராத திமுகவின், பொருளாளர் மு.க.ஸ்டாலினின் இணையதளத்தில் வாழ்த்து இடம் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
பிற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் திமுக தலைவர்கள், இந்துப் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை. எனவே ஸ்டாலின் தெரிவித்த வாழ்த்துச் செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஆனால், இது மு.க.ஸ்டாலினின் முன் அனுமதியின்றி நடைபெற்ற செயலாகும். இந்த வாழ்த்து செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை திமுக தலைமைக் கழகம் தடாலடியாக மறுப்பு தெரிவித்தது.
இதற்கு எச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
இந்துக்களுக்கு எதிரான திமுக
இந்த சம்பவத்தின் மூலம் தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்துக்களுக்கு எதிராக செயல்படுவது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்துக்கள் மீதான வன்மப் போக்கு
இஸ்லாம், கிறிஸ்தவ பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லுவதை போல் நாகரீகம் கருதி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்தை பொறுத்துக் கொள்ளாமல் வாபஸ் பெற்றது இந்துக்கள் மீதான வன்மமான போக்கையே காட்டுகிறது.
மனதைப் புண்படுத்தியுள்ளனர்
இதன் மூலம் இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டனர்.
இந்துக்கள் வெளியேற வேண்டும்
இந்த விரோத மனப்பான்மையை உணர்ந்து தி.மு.க.வில் இருக்கும் இந்துக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார்.
வானதி கண்டனம்
மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கூறுகையில், எந்த ஒரு இனம், மொழி, மதத்தை சேர்ந்தவர்களுக்கும், அவர்களது பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது நாகரீக சமுதாயத்தில் ஆரோக்கியமான சிறப்பான விசயம்.
இந்து எதிர்ப்பில் திமுக
விநாயகர் சதுர்த்திக்கு வெளியிடப்பட்ட வாழ்த்தை திரும்பப் பெற்றதன் மூலம் தி.மு.க. இந்து எதிர்ப்பில் உறுதியாக இருப்பது தெரிய வந்துள்ளது.
தலைவர்களின் வீடுகளில் சாமி- பூஜை
அத்தனை தலைவர்களின் வீடுகளிலும் பூஜை அறையும் உள்ளது. சாமி படங்களும் உள்ளது. கோவில்களில் அன்னதானம் முதல் அத்தனை திருப்பணிகளையும் செய்கிறார்கள்.
இந்துக்கள் மீது ஏன் இத்தனை வெறுப்பு
அப்படி இருந்தும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை திரும்ப பெற்றது, இத்தனை நாட்களாக மக்களிடம் காட்டி வந்த இந்து வெறுப்பு உணர்வை தொடர்ந்து கடைபிடிப்பதாக வெளிக்காட்டும் முயற்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.