சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் முத்தப்போராட்டம்: நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்
சென்னை: ஐஐடி மாணவர்களின் முத்தப் போராட்டத்துக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் (தமிழகம்) அலுவலக செயலாளர் எஸ்.ஆர்.குமாரவேல் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாணவ- மாணவிகள் எந்தவித முன் அனுமதியின்றி ‘கிஸ் ஆப் லவ்' என்ற பெயரில் காம வெறியாட்டம் ஆடியுள்ளனர்.
இந்தியா முழுவதிலும் உள்ள இந்துக்களின் மனதை இச்சம்பவம் மிகவும் பாதித்துள்ளது. இதில் ஈடுபட்ட மாணவர்களை ஐ.ஐ.டி.யில் இருந்து டிஸ்மிஸ் செய்வதுடன், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கலாச்சாரம், பண்பாடு, நாகரீகத்தை பேணி காக்கும் தமிழகத்தில் இதுபோன்ற மேற்கத்திய கலாச்சாரத்தை எந்த சூழலிலும் அனுமதிக்க முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற ஓட்டலுக்கு சென்ற பாஜக வினர் அநாகரிக செயல்களில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர்.
இதனை தொடர்ந்து பாஜக தொண்டர்களுக்கும், இளைஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதற்கு இரு தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும், இதனை கண்டிக்கும் வகையில், "கிஸ் ஆப் லவ்" என்ற முத்தம் கொடுக்கும் அமைப்பு தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பினர் பொது இடங்களில் கூடி ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த போவதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து, கடந்த 2ஆம் தேதி கொச்சியில் இந்த அமைப்பினர் கூடி ஒருவருக்கொருவர் முத்தமிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினரும் அங்கு குவிந்தனர்.
அங்கு வந்த போலீசார் முத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி விரட்டினர். இந்நிலையில், இந்த முத்தம் கொடுக்கும் அமைப்பிற்கு பல பகுதியில் இருந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் ஒரு அங்கமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பை ஐஐடியில் முத்தம் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சென்னை ஐஐடி மாணவ-மாணவிகள் சிலர் நேற்று ஐஐடி வளாகத்தில் கிஸ் ஆப் லவ் அமைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications