தருமபுரிக்கு போறீங்களா.. டக்கென சர்ப்ரைஸ் தந்த ஒகேனக்கல்.. ஆசை ஆசையாக வந்து குவிந்த மக்கள்.. ஒரே ஜாலி
தர்மபுரி: ஒகேனக்கல்லில், இத்தனை நாட்களும் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தடை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், சுற்றுலா பயணிகளின் வருகையும் ஒகேனக்கல்லுக்கு அதிகரித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.. இதனால், சென்னை, செங்கல்பட்டு உட்பட பல்வேறு நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன.. குறிப்பாக, சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழும், பூண்டி, புழல் செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் நிரம்பி வருகின்றன.. இதனால் போதுமான நீர்வரத்து உள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கபினி அணைகள்: இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது.
தமிழகத்திற்கு உபரி நீர் வெளியேற்றப்பட்டதாலும், தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
காவிரி நீர்வரத்து: இதன்காரணமாக, அன்றைய தினம், ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்தானது, மறுநாளே, வினாடிக்கு 9,500 கனஅடியாக குறைந்துவிட்டது. எனவே, காவிரி ஆற்றில் நீர்வரத்து கூடுவதும், குறைவதுமாக இருந்துவருவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துவிட்டது..
வார விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் ஆசை ஆசையாக ஒகேனக்கல்லுக்கு வந்த நிலையில், பரிசல் இயக்க தடை என்பதால், ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றார்கள்.. இதனால், அடுத்தடுத்த நாட்களிலும், சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே காணப்பட்டது. இதனிடையே, கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டதாலும், காவிரி நீர் பிடிப்பதில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததாலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.
சரிவு நிலை: நேற்றைய நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை, அதாவது, ஆகஸ்ட் 5ம் தேதி நிலவரப்படி, 6500 கன அடியாகவும் சரிந்து காணப்பட்டது..
இந்த நீர் வரத்து குறைவால், கடந்த 3 நாட்களாக பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடையானது, அதிரடியாக நீக்கப்பட்டதுடன், இன்று முதல் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி தந்தது.. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
எதிர்பார்ப்பு: இனி அடுத்தடுத்த நாட்களிலும், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதனிடையே, தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்ல, அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications