தமிழக- இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையை ஒத்தி வைக்க தமிழக அரசு கடிதம்!
சென்னை: தமிழக- இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தையை ஒத்தி வைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழக மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் குற்றம்சாட்டி ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் படகுகளும் பிடித்து வைக்கப்பட்டன.
இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் வைத்த வேண்டுகோளை ஏற்று சென்னையிலும், கொழும்பிலும் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

பொதுவாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் இடம், தேதி போன்றவற்றை, இலங்கை மற்றும் தமிழக அரசிடம் பேசி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நிர்ணயித்து வந்தது. இந்த நிலையில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை, சென்னை தேனாம்பேட்டை மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற இருந்தது.
ஆனால் இக் கூட்டத்தை 11-ந்தேதி நடத்த உத்தேசித்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்தது. இப்படி தேதி முடிவாகாததால் இதுவரை கூட்டம் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் இப்பேச்சுவார்த்தை குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மார்ச் 11-ந்தேதி நடத்துவதாக இலங்கை அரசால் உத்தேசிக்கப்பட்ட மீனவர் பிரதிநிதி கூட்டத்தில் பங்குகொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்தக் கூட்டத்தை இம்மாதம் 15-ந் தேதிக்கு மேல் ஒரு நாளில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications