உடுமலை தலித் இளைஞர் படுகொலை: பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் சரண்
திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் நேற்று தலித் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கவுசல்யாவின் தந்தை நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட கவுசல்யா-சங்கர் காதல் ஜோடிகள் மூன்று பேர் கொண்ட கும்பலால் நேற்று மதியம் நடுரோட்டில் சரமாரி அரிவாளால் வெட்டப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலில் இளைஞர் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார், கவுசல்யா தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த படுகொலை சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. நாடுமுழுவதும் பிரபல ஊடகங்களில் வெளியானதால் இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட கவுசல்யா, சங்கர் தம்பதியினருக்கு கடந்த சிலவாரங்களாகவே கொலை மிரட்டல் வந்து கொண்டிருந்தது. பெண்ணின் உறவினர்கள் நேரடியாக சென்று பத்து லட்சம் ரூபாய் பணம் தருவதாகவும், சங்கரை விட்டு விட்டு வந்து விடுமாறும் அழைத்துள்ளனர். அதற்கு கவுசல்யா மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் எப்படி வாழ்ந்து விடுவீர்கள் என்று பார்க்கலாம் என்றும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர்.
சங்கரின் உடலுக்கு கோவை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை தொடங்கியது. இதனை நிறுத்தக்கோரியும், மரணத்திற்கு நியாயம் கோரியும் உறவினர்கள் போராட்டம் நடத்தியால் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
சங்கரை வெட்டி கொலை செய்த கும்பலை திருப்பூர் மாவட்ட போலீசார், தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், இந்த கவுரவக் கொலையில் தொடர்புடைய கவுசல்யாவின் தந்தை சின்னசாமி நிலக்கோட்டை நீதிமனறத்தில் ஆஜராகியுள்ளார். தம்பதிகளை அரிவாளால் வெட்டிய கும்பல் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமறைவாக உள்ள பெண்ணின் தாய்மாமனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications