கூவத்தூரில் அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் 3 மணிநேரம் பேரம் பேசிய சசிகலா!
சிறைவைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து தப்பி ஓட முயற்சித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா நேரடியாக கூவத்தூர் சென்று அதிருப்தியாளர்களிடம் 3 மணிநேரம் பேரம் பேசிவிட்டு திரும்பினா
சென்னை: கூவத்தூரில் சிறைவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் நேரடியாக கூவத்தூர் சென்று அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் 3 மணி நேரம் பேரம் பேசிவிட்டு திரும்பினார் சசிகலா.
அதிமுக எம்.எல்.ஏக்களை சென்னை-புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் என்ற இடத்தில் சிறைவைத்துள்ளது மன்னார்குடி கோஷ்டி. இவர்களில் பெரும்பாலானோர் முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரிக்கும் நிலையில் உள்ளனர்.
இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கூவத்தூரில் சிறைவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்களை விடுவிக்க கோரி போராட்டம் நடத்தினர். சில எம்.எல்.ஏ.க்கள் தப்பி ஓடவும் முயற்சித்தனர்.
இதனை மன்னார்குடி குண்டர்களால் சமாளிக்க முடியவில்லை. இத்தகவல் சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே பதவி கிடைக்காதோ என பதற்றத்தில் வெறித்தனமாக வன்முறையை தூண்டும் வகையில் சசிகலா பேசிவருகிறார்.
அவருக்கு இந்த தகவல் கிடைத்ததும் கடும் அதிர்ச்சியில் உறைந்து போனாராம். இதையடுத்து அந்த அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் நானே பேரம் பேசுகிறேன் என புறப்பட்டு கூவத்தூர் சென்றார் சசிகலா.
அங்கு அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் சசிகலா சுமார் 3 மணிநேரமாக பேரம் பேசிவிட்டு திரும்பினார். சசிகலா சந்தித்த போது பல அதிமுக எம்.எல்.ஏக்கள் முகத்தில் பேயறைந்தவர்களாக காட்சி அளித்தனர்; பலரது முகத்திலும் ஒருவித பீதி இருந்ததை காண முடிந்தது.