ஓசூர் அருகே திமுக பிரமுகர் வெட்டி கொலை: மர்ம நபர்கள் வெறிச் செயல்
ஓசூர் அருகே திமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே திமுக பிரமுகர் ஒருவர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கார்கொண்டபள்ளியைச் சேர்ந்தவர் முனிராஜ் (60). இவர் பாஜகவில் வர்த்தக அணியில் பொறுப்பில் இருந்தவர். கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க, சார்பில் போட்டியிட சீட் கேட்டார். ஆனால் கிடைக்கவில்லை. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.
இந்தநிலையில் முனிராஜ் நேற்று காலை தனக்கு சொந்தமான கல் குவாரில் இருந்தபோது அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் முனிராஜிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தகராறு முற்றியதில் முனிராஜை அவர்கள் சரமாரியாக வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த முனிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்தவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.