கரூரில் நள்ளிரவில் பேயாட்டம் போட்ட சூறாவளி.. வீடுகளின் ஓடுகள், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள் பறந்தன!
கரூர்: கரூர் பகுதியில் நள்ளிரவு வீசிய சூறாவளி காற்றினால் வீடுகளின் கூறை ஓடுகள், ஆஸ்பெஸ்டாஸ் ஓடுகள் காற்றில் பறந்தன. மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டது.

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் தொப்பம்பட்டி, ஒண்டியூர், சங்கம்கரை, துக்காச்சி உள்ளிட்ட சுமார் 10 கிராமங்களில் நேற்று நள்ளிரவு திடீரென சூறாவளி காற்று வீசியது.

இந்த பயங்கர சூறாவளி காற்றால் இந்த பகுதியில் சுமார் 40 வீடுகளில் மேற்கூரையில் வேயப்பட்டிருந்த ஓடுகள், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்கள் காற்றில் பறந்தன. கிராமப்பகுதியில் இருந்த பல மரங்கள் வேரோடு சாய்ந்தது. மேலும், ஒரு சில மின்கம்பங்கள் சாய்ந்ததால் உடனடியாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

இதனால் பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் இரவு முழுக்க தூங்காமல் தவித்தனர். தகவல் அறிந்ததும், பாதிக்கப்பட்ட பகுதிகளை கரூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சூறாவளிக் காற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து "குடிசை வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், மற்ற நிவாரணங்களும், பகுதி பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2500-ம் மற்ற நிவாரணங்களும் கிடைக்கும். ஆனால், இங்கு ஓட்டு வீடுகளும், ஆஸ்பெஸ்டாஸ் வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது எனவே, உங்கள் கோரிக்கைகளை அரசு அனுப்பி வைக்கப்படும்" என்று கலெக்டர் ஜெயந்தி அவர்களிடம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications