வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முக்கிய ஆவணங்கள்... திரும்பப் பெற இதோ வழிகள்!
சென்னை: வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளத்தால் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மக்கள் இழந்துள்ளனர். இதனால் கலக்கமடைந்துள்ள அவர்களுக்கு, அவற்றை மீண்டும் பெறுவதற்கான வழிமுறைகள் உள்ளன எனக் கூறி அரசு ஊழியர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர்.
வீட்டை நிரப்ப ஓடி வரும் வெள்ளத்தில் இருந்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பான இடம் தேடி ஓடும் மக்களுக்கு உயிர் மட்டுமே அந்த நேரத்தில் முக்கியமானதாக இருக்கும். ஆனால், வீட்டை விட்டு வெளியேறிய பின், நிவாரண உதவி பெறுவதில் இருந்து அனைத்திற்கும் ஏதாவது அடையாளச் சான்று தேவைப் படுகிறது.
அதிலும் கஷ்டப்பட்டு படித்து வாங்கிய பட்டம், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை நீரில் மூழ்கி அல்லது அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் பெரும் துயர் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னை உள்ளிட்ட இடங்களில் மழையளவு சற்றுக் குறைந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்கள், குடும்ப அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை மீண்டும் பெறமுடியும் என்ற அரசு ஊழியர்களின் வார்த்தைகள் மக்களுக்கு தைரியத்தை அளித்துள்ளது.
இதோ அதற்கான நடைமுறைகள்:

மதிப்பெண் பட்டியல்:
வெள்ளத்தால் பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்களை இழந்தவர்கள் முதலில், போலீசில் புகார் அளித்து அதனைக் கண்டுபிடிக்க இயலவில்லை என்ற சான்றிதழைப் பெற வேண்டும். பின்னர் தாங்கள் படித்த பள்ளி, கல்லூரிகளில் உரிய விண்ணப்பம் பெற்று, அதனை வட்டாட்சியரிடம் அளித்து, அசல் சான்றிதழ் மீண்டும் திருப்பப் பெற வாய்ப்பின்றி இழக்கப்பட்டது என்ற சான்றிதழைப் பெற வேண்டும்.

விண்ணப்பம்:
அதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரியில் பெறப்பட்ட அந்த விண்ணப்பத்தோடு, மற்ற இணைப்புகளையும் சேர்த்து கல்வித் துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு, அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.

தனித்தேர்வர்கள்:
தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். பட்டப்படிப்பு, அதற்கு மேற்பட்ட உயர் கல்விச் சான்றிதழ்களுக்கு தொடர்புடைய பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

முக்கிய விபரங்கள்:
சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பிக்கும்போது, தேர்வு எழுதிய பதிவு எண், ஆண்டு, மாதம் ஆகிய விவரங்களைக் கட்டாயம் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விபரங்களுக்கு தங்களது பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வோர் ஆகியோரை பாதிக்கப்பட்டோர் அணுகி தெரிந்து கொள்ளலாம்.

குடும்ப அட்டை:
வெள்ளத்தில் குடும்ப அட்டையை இழந்தவர்கள், கிராமப்புறங்களில் வட்ட உணவுப் பொருள் வழங்கல் அலுவலரையும், நகரப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கல் துறை மண்டல உதவி ஆணையர் ஆகியோரையும் அணுக வேண்டும். பின்னர், சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் குடும்ப அட்டை காணாமல்போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் அளித்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அத்துடன், காணாமல்போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டையின் நகலை இணைத்து அளிக்க வேண்டும்.

ஓட்டுநர் உரிமம்:
இதேபோல், டிரைவிங் லைசன்ஸை வெள்ளத்தில் இழந்தவர்கள், முதலில் போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும். பின்னர் போலீசாரின் சான்றிதழோடு, புதிய லைசன்ஸ் வேண்டி, மாவட்ட போக்குவரத்து அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பழைய ஓட்டுநர் உரிமத்தின் நகல் அல்லது எண்ணை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெபிட் கார்டு:
பற்று அட்டை எனக் குறிப்பிடப்படும் வங்கி டெபிட் கார்டை தொலைத்தவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் அந்த கார்டு மூலம் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுவது தடுக்கப்படும்.

புதிய அட்டை:
பின்னர், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளரை அணுகி, கடிதம் மூலம் பற்று அட்டை தொலைந்ததை தெரியப்படுத்த வேண்டும். கூடவே புதிய அட்டை வழங்குமாறு கோர வேண்டும். அப்போது, பாதிக்கப்பட்ட நபர் தனது வங்கிக் கணக்கு, முகவரி, அடையாள அட்டை தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும்.

பட்டா:
இதேபோல், வீட்டுமனைப் பட்டா தொலைந்துபோனால், முதலில் வட்டாட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். அவரது பரிந்துரையின்பேரில் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா அளிக்கப்படும்.

ஒன்றல்ல...
ஒரு குறிப்பிட்ட ஆவணம் மட்டும் தொலைந்திருந்தால், அலைந்து திரிந்து அதற்கு மாற்று சான்றிதழ் பெறலாம். ஆனால், ஒரே நேரத்தில் வெள்ளத்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட பல முக்கிய ஆவணங்களை மக்கள் இழந்துள்ளனர்.

சிறப்பு முகாம்கள் தேவை:
இதனால், வெள்ள பாதிப்பு குறைந்த பின்னர் அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து அனைத்து சான்றிதழ்களையும் ஒரே இடத்தில் பெற வழிவகை செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பு.
இதை கவனத்தில் கொள்ளுமா தமிழக அரசு?












Click it and Unblock the Notifications