தமிழக பெருநகரங்களில் அறிவுஜீவிகளை வளைக்க மாவோயிஸ்டுகள் ப்ளான்: திடுக் தகவல்கள்
சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் பெருநகரங்களில் அறிவுஜீவிகளை தங்களது ஆதரவாளர்களாக வளைத்துப் போட மாவோயிஸ்டுகள் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
மாவோயிஸ்டுகள் கேரளா, தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் காலூன்ற முயற்சித்துப் பார்த்தனர். ஆனால் அவர்களால் ஆந்திராவில்தான் வேரூன்றி நிற்க முடிந்தது. தமிழகத்தில் வேரூன்ற மேற்கொண்ட முயற்சிகள் கை கொடுக்கவில்லை.

தற்போது மீண்டும் தென்னிந்தியாவில் காலூன்றிவிடும் முயற்சியில் மாவோயிஸ்டுகள் இறங்கியுள்ளனர். பொதுவாக மாவோயிஸ்டுகள் கிராமங்களையும் ஆதி பழங்குடி மக்களையும் தங்களது இயக்கத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் இந்த யுக்தி கை கொடுக்காமலே இருந்து வந்தது.
தமிழகம்- கேரளா- கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிதான் மாவோயிஸ்டுகளின் தற்போதைய முகாமாக இருக்கிறது. இங்குதான் தங்களது முகாம்களை அமைத்து அதை மெல்ல மெல்ல விரிவாக்க திட்டமிட்டுள்ளனர்.
அண்மையில் மேற்கு தொடர்ச்சி மலை ஜோனல் கமிட்டி என்ற மாவோயிஸ்டுகள் முன்னணி அமைப்பு ஒன்றின் சில ஆவணங்கள் உளவுத்துறைக்கு கிடைத்திருக்கிறது. அதில் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் எப்படி மாவோயிஸ்டுகள் இயக்கத்தை வேரூன்ற வைப்பது என்பது தொடர்பான விரிவான திட்டங்கள் பட்டியலிடப்பட்டிருந்ததாம்.
கேரளாவைப் பொறுத்தவரையில் வயநாடு, கண்ணூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் ஊடுருவிவிட்டனர். கர்நாட்காஅவின் சில பகுதிகளிலும் கூட மாவோயிஸ்டுகள் ஊடுருவி உள்ளனர்.
ஆனால் தமிழ்நாட்டில் மாவோயிஸ்டுகளின் இலக்கு வேறு மாதிரியாம்.. அதாவது பெருநகரங்களில் ஊடுருவி அறிவுஜீவிகளை தங்களது இயக்கங்களின் ஆதரவாளர்களாக்குவது என்பதுதான் அவர்களின் வியூகமாம்,. அப்படி அறிவுஜீவிகளை பயன்படுத்தினால் அவர்கள் தங்களுக்காக தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்வார்கள் என்பது மாவோயிஸ்டுகளின் திட்டம்.
அத்துடன் மாவோயிஸ்டுகள் உடனடியாக ஆயுதப் போராட்டத்தை தொடங்கப் போவதில்லையாம்.. மாவோயிஸ்டுகளின் கருத்துகள் அதிக அளவில் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் அறிவுஜீவிகளை வலைவீசி தேடுகின்றனராம்.. இதனால் உளவுத்துறை அதிகாரிகள் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் யார்? யார்? என பட்டியல் எடுத்து தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கிவிட்டதாம் உளவுத்துறை.












Click it and Unblock the Notifications