பல லட்சம் அபேஸ்.. மெரினா ஏடிஎம்மில் திருட பீகாரிலிருந்து விமானத்தில் வந்த கொள்ளையர்கள்!
சென்னையில் உள்ள பல ஏடிஎம்களில் கொள்ளையடித்த பீகார் கொள்ளையர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னையில் உள்ள பல ஏடிஎம்களில் திருடிய பீகார் கொள்ளையர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2 லட்சம் ரூபாய் வரை இதுவரை கொள்ளையிட்டுள்ளனர். ஆனால் இவர்கள் அதற்கும் அதிகமாக திருடி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் மெரினா பகுதியில் இருக்கும் ஏடிஎம்களில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி கொள்ளை போய் உள்ளது. இதுகுறித்து பல முறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பீகாரை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களிடம் போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.
போலீஸ் விசாரணை
தொடர் புகாரை அடுத்து இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோர் இந்த தனிப்படைக்கு தலைமை தாங்கினார். திருவல்லிக்கேணி துணை கமிஷனர் செல்வ நாகரத்தினம் இந்த படைக்கு மேற்பார்வை செய்தார். இவர்கள் தலைமையில் மொத்தம் 9 பேர் கொண்ட குழு விசாரித்தது.
கைது செய்தனர்
இந்த நிலையில் மெரினா எஸ்பிஐ ஏடிஎம் ஒன்றின் பக்கம் சந்தேகப்படும்படி நின்ற இரண்டு பீகார் இளைஞர்களை போலீஸ் கைது செய்தது. அவர்களை விசாரித்ததில் அவர்கள்தான் பணத்தை எல்லாம் திருடியது என்று கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் இரண்டு பேர் பீகாரில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்கள் திருடிய பணத்தை எல்லாம் பீகாரில் உள்ள கணக்கு ஒன்றில் போட்டுள்ளனர்.
எப்படி செய்தனர்
இதற்காக அவர்கள் ஏடிஎம் மிஷினை உடைக்கவில்லை. ஹேக் செய்யவில்லை. மாறாக வாடிக்கையாளர்கள் பின் நம்பர் போடுவதை மறைமுகமாக பார்த்துவிட்டு, பின் அவர்கள் சென்றவுடன், அந்த பரிமாற்ற செயல்பாடு முடியாமல் இருக்கும்பட்சத்தில் பணம் எடுத்துள்ளனர். இப்படி யார் எல்லாம் முழுதாக பண பரிமாற்றத்தை முடிக்காமல் செல்கிறார்கள் என்று பார்த்து பார்த்து பணம் திருடி இருக்கிறார்கள்.
விமானத்தில் வந்தனர்
நிறைய பணம் சேர்ந்த பின் இவர்கள் பீகாருக்கு விமானத்தில் சென்றுள்ளனர். இவர்கள் அதன்பின் முழுக்க முழுக்க விமானத்திலேயே பயணம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. சென்னைக்கு கொள்ளையடிக்கவே விமானத்தில் வந்துள்ளனர். இவர்களின் பெயர் முன்னுகுமார், மனோகர்குமார் என்பது தெரிய வந்துள்ளது.