மழையையே சமாளிக்க முடியாத அரசு, அணு உலை விபத்திலிருந்து மக்களை எப்படி காப்பாற்றும்?
நெல்லை: தலைநகர் சென்னையில் ஒருநாள் கொஞ்சம் அதிகமாக பெய்த மழைக்கே ஐய்யோ, அப்பா என சத்தம் போட்டு, உருண்டு புரளும் ஆட்சி நிர்வாகம், மக்களை படகில் மிதக்கவிட்டு, வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதை தடுக்க முடியாத ஆட்சியாளர்கள்தான், கண்ணுக்கு தெரியாமலே பரவி, பல உயிர்களையே காவு வாங்கும் சக்தி கொண்ட அணு சக்தியை உற்பத்தி செய்யும் உலையை பாதுகாத்துவிடுவோம் என்று ஜம்பம் செய்துவருகிறார்கள்.
கூடங்குளத்தில் அணு உலையை செயல்பட விட்டால் எந்த ஆபத்து வந்தாலும் நாங்கள் இருக்கிறோம்.. என்று கூறிய அரச நிர்வாகத்தின் அதள பாதாள ஓட்டையை வடகிழக்கு பருவமழை அப்பட்டமாக காட்டிக்கொடுத்துவிட்டது.
இயற்கையின் கொடை மழை. ஆனால், அதை பேரிடர் என்று கூறும் நிலையில்தான், அரசு நிர்வாகம் உள்ளது. எந்த மழை பெய்து கடலில் சென்று கலக்க இயற்கையே தேவைப்படும் வசதிகளை செய்துதான் வைத்துள்ளது. குறுக்கே புகுந்து, அதை கெடுத்தது மனிதர்கள்தான்.

சென்னை மிதக்கிறதாம்
வடகிழக்கு பருவமழை கொஞ்சம் வேகமாக பெய்துவிட்டாலும் சென்னை மிதக்கிறது, தூத்துக்குடி மூழ்கியது என செய்திகள் வரும் நிலை உள்ளது. கடலோரத்திலுள்ள இந்த இரு நகரங்களில் கூட, மழை வெள்ளம் கடலில் சென்று சேர வசதியில்லை, அதுகுறித்த எத்த அக்கறையும் இதுவரை ஆண்டவர்களுக்கும் இல்லை என்பது இந்த மழை நினைவூட்டிய பாடம்.

சும்மா ஓடும் தண்ணீர்
மேட்டிலிருந்து பள்ளத்துக்கு பாய்ந்து ஓடும் ஒரு தண்ணீரின் போக்கையே சமாளிக்க முடியாமல், மக்கள் பலரை பலியாக விட்டுள்ளது அரச நிர்வாகம். அப்படியிருக்கும்போது, செயற்கையாக தயாரிக்கப்படும் அணு சக்தி உற்பத்தியின்போது, விபத்து ஏற்பட்டால் அதை எப்படி இந்த அரசுகள் தடுக்க முடியும் என்ற கேள்வி தற்போது தமிழக மக்களின் இதயத்தில் திக்..திக்.. திகிலாக மாறி ஒலிக்க தொடங்கியுள்ளது.

மா மழை போற்ற வேண்டாமா?
பூகம்பம், எரிமலை சீற்றம், சுனாமி போன்றவற்றை இயற்கை பேரிடர் எனக்கூற முடியும். ஆனால், மா மழை போற்றுதும்.. மா மழை போற்றுதும்.. என புலவர்கள் கொண்டாடிய இந்த தமிழ் மண்ணில் மழையை கூட பேரிடராக மாற்றி வைத்துள்ளோம். நிலைமை இப்படியிருக்க கண்ணுக்கே தெரியாமல் பல உயிர்களை பறிக்க கூடிய அணு கதிர்வீச்சு அபாயம் போன்றவை ஏற்பட்டால் அதில் இருந்து மக்களை இந்த அரசால் காக்க முடியுமா?

2 மணி நேரத்தில் ஓடவேண்டும்
கூடங்குளம் அணு உலையில் விபத்து நடந்தால், நெல்லை மாவட்டத்தின் ராதாபுரம் தாலுகா தொடங்கி, கன்னியாகுமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவில் வரையுள்ள 15 லட்சம் மக்களை இரண்டு மணி நேரத்தில் அப்புறப்படுத்தப்பட வேண்டும். மழை வெள்ளத்தில் இருந்தே மக்களை காக்க முடியாத அரசுகளால், இதை செய்துவிட முடியுமா?

புகுஷிமா பாடம்
ஆனாளப்பட்ட ஜப்பானே புகுஷிமாவால் நிலை குலைந்துவிட்ட நிலையில், கரை வேட்டிகளின் ராஜ்ஜியத்தில் அணு விபத்துகள் நடந்தால்?












Click it and Unblock the Notifications