பினு கோஷ்டியை போலீஸ் அலேக்காக தூக்கியது எப்படி? பரபர "புது" தகவல்கள்
பினு கோஷ்டியை போலீஸார் சுற்றி வளைத்தது எப்படி என்று தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
Recommended Video
சென்னை: சென்னையில் ரவுடி பினு மற்றும் அவரது கூட்டாளிகள் 76 பேர் சிக்கியது எப்படி என்பது குறித்து புது தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் அனைவரும் ஒரு இடத்தில் திரள போகின்றனர் என்ற தகவலை கொடுத்ததே ஒரு ரவுடிதானாம்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த பினு. கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டு போலீஸுக்கு டிமிக்கி கொடுத்து வந்த ரவுடிகளுள் ஒருவராவார். இவருக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதற்காக தனது கூட்டாளிகள் அனைவருடனும் உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைவரையும் பூந்தமல்லியை அடுத்த மலையம்பாக்கத்தில் திரட்டினார் பினு.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அந்த இடத்தை சுற்றி வளைத்த பினு மற்றும் அவரது கூட்டாளிகள் 76 பேரையும் கைது செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன
இதுகுறித்து காவல் துறை உதவி ஆணையர் கண்ணன் கூறுகையில் பூந்தமல்லியில் ரவுடிகள் ஒன்று கூடுவது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்ததும் அங்கு சென்று எங்களின் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் பக்காவாக திட்டமிட்டோம். அதற்காக போலீஸ் வாகனத்தில் செல்லாமல் தனிப்பட்ட காரில் சென்றோம். பூந்தமல்லி சர்வீஸ் சாலை டூ மலையம்பாக்கத்தில் வேணு லாரி ஷெட்டில் பினு எனும் தேடப்படும் குற்றவாளி கூட்டாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடுவதாக தகவல் கிடைத்தது.
துப்பாக்கி முனையில் பிடித்தோம்
ரவுடிகள் என்பதால் அவர்களும் துப்பாக்கி, ஆயுதங்கள் வைத்திருப்பார்கள் என்று தெரிந்து நாங்களும் துப்பாக்கியுடன் சென்று அவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கி முனையில் அத்தனை பேரையும் கைது செய்தோம். அப்போது எங்களிடம் இருந்து வடக்கு மலையம்பாக்கம் மற்றும் தெற்கு மலையம்பாக்கம் கிராமங்களுக்கு தப்பி சென்றவர்களை கிராம மக்கள் பிடித்து எங்களிடம் ஒப்படைத்தார்கள் என்றார் அவர்..
மற்றொரு ரவுடியை கொலை செய்ய சதி
பிடிபட்ட ரவுடிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் மற்றொரு ரவுடியான ராதாகிருஷ்ணன் என்பவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. கொலை, கொள்ளை, வழிபறி ஆகிய 8 வழக்குகள் போடப்பட்டுள்ளது.
போலீஸுக்கு தகவல்
ராதாகிருஷ்ணன் நம்பர் 1 இடத்தில் ரவுடியாக உள்ளார். அவரை தீர்த்து கட்டிவிட்டால் நாம் அந்த இடத்துக்கு போய்விடுவோம் என்ற ஆசையில் அவரை கொல்ல பினு கோஷ்டி திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதை அறிந்த ராதாகிருஷ்ணன் இவர்கள் கூடி பிறந்தநாள் கொண்டாடுவது குறித்து முன்கூட்டியே போலீஸுக்கு ரகசிய தகவல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலின்பேரில்தான் போலீஸ் பினு கோஷ்டியை சுற்றி வளைத்தது.