காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருச்சி மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்
திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரி திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு குற்றச் செயல்களுக்காக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 91 கைதிகள் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்துத் தரக் கோரியும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
திருச்சி சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறை கைதிகள், சரியான அளவு தங்களுக்கு உணவு வழங்கப்பட வேண்டும்; உறவினர் வந்து பார்த்து பேசும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்; உறவினர்கள் வந்து பார்ப்பதற்கு வசதியாக அந்தந்த ஊரில் உள்ள சிறைகளுக்கே மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 91 கைதிகளிடம் போராட்டத்தை கைவிடுமாறு சிறை டிஐஜி ஜெயபாரதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.