மண்ணெண்ணெய் ஊற்றி மனைவி உயிரோடு எரிப்பு: கணவன் உயிர் ஊசல்
நெல்லை: நெல்லை அருகே சொத்துத் தகராறில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை தள்ளிவிட்டபோது நெருப்பு பற்றியதால் கணவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியா புரத்தை சேர்ந்தவர் ஷேக்உதுமான் (வயது28). இவரது மனைவி அஜிதா (32). இவர்களுக்கு அபரா (10) என்ற மகள் உள்ளார்.
வெளிநாட்டில் எஞ்ஜீனியராக ஷேக் உதுமான் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஷேக் உதுமான் சொந்த ஊருக்கு வந்தார்.
அப்போது கணவன் -மனைவி இடையே சொத்து பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. தகராறு ஏற்படும் போதெல்லாம் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ஷேக் உதுமான் மனைவியை சரமாரியாக அடித்து உதைத்து அவர் மீது மண்எண்ணை ஊற்றி தீவைத்தார். மேலும் வீட்டில் இருந்த சிலிண்டரையும் திறந்து விட்டார்.
உடலில் தீப்பிடித்த அஜிதா கதவை திறந்து தப்பிக்க முயன்றபோது ஷேக் உதுமான் மனைவியை வீட்டினுள் தள்ளி விட்டுள்ளார். இதனால் அவரும் படுகாயம் அடைந்தார்.
கணவன்-மனைவியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் கடையநல்லூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து கருகிய நிலையில் கிடந்த கணவன்-மனைவியை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவமனைக்குப் போகும் வழியிலேயே அஜிதா பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் ஷேக்உதுமான் சிகிச்சை பெற்று வருகிறார்.
சேக் உதுமான் சிலிண்டரையும் திறந்து விட்டதால் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மனைவியை கணவன் உயிரோடு எரித்து கொன்ற சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.