கர்ப்பிணி மனைவியுடன் வாழ மறுத்த கணவன் – ஜெயிலில் கம்பி எண்ணுகிறார்!
திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டில் கர்ப்பமான மனைவியுடன் வாழ மறுத்த கணவர் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு பெரியநத்தம் பகுதியை சேர்ந்தவர் கோமதி. செங்கல்பட்டில் வேலை செய்கிறார். காஞ்சிபுரத்தை சேர்ந்த வடிவேல் டிரைவர். இருவரும் பல மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
திருமணம் செய்ய முயன்ற போது வடிவேலுவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு திருப்போரூர் முருகன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு கோமதி வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் கோமதி கர்ப்பம் தரித்தார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு, "தனது தந்தைக்கு உடல்நலம் சரியில்லை, அவரை பார்த்து விட்டு வருகிறேன்" என கூறி சென்றார் வடிவேல். அதற்கு பிறகு வீடு திரும்பவில்லை. கோமதி தொடர்பு கொண்ட போது எந்த பதிலும் இல்லை.
ஒரு கட்டத்தில் கோமதியுடன் வாழ மறுத்துள்ளார். இதுகுறித்து செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கோமதி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர். சேர்ந்து வாழ மறுத்ததால் வடிவேலை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.