மனைவியை பிளாஸ்டிக் கவரில் கட்டி வைத்துக் கொடூரமாக கொன்ற கணவன்
சென்னை: பிளாஸ்டிக் கவரில் கட்டி வைத்து மனைவியை கொன்ற கணவரை சென்னை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுவண்ணாரப்பேட்டை ஆவூர் முத்தையா தெருவை சேர்ந்தவர் மோகன் . தனியார் பள்ளி வாகன டிரைவர்.இவரது மனைவி ஷோபனா .
இவர்களுக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு மோகன் வீட்டில் இருந்தார். அதன்பிறகு அவரை காணவில்லை. வீட்டின் கதவு தாழ்பாள் போடப்பட்டிருந்தது.
இன்று காலை வீட்டின் உள்ளே இருந்து துர்வாடை வீசியது. இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் உதவி கமிஷனர் நசீர்பாட்சா உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் பலவேசம் சம்பவ இடம் சென்றார்.
அந்த வீட்டினுள் ஷோபனா பிளாஸ்டிக் பைக்குள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் காயங்கள் காணப்பட்டன. இறந்து 2 நாட்கள் ஆகி இருந்ததால் பிணத்தில் இருந்து துர்வாடை வீசியது.
கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மோகன், அவரது மனைவி ஷோபனாவை அடித்து உதைத்ததாகவும், இதில் மயங்கி விழுந்த அவரை பிளாஸ்டிக் பைக்குள் திணித்து கட்டி கொலை செய்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
சினிமா பாணியில் இந்த கொலையை செய்த மோகன் தப்பி ஓடி தலை மறைவு ஆகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை புதுவண்ணாரப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.