மனைவியை மாடியில் இருந்து தள்ளிக் கொலை செய்த கணவன்
சென்னை: மனைவியை மருத்துவமனை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொளப்பாக்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வீரமணி. இவரது மனைவி சித்ரா. வீட்டு வேலைக்கு சென்று வந்தார். இவர்களுக்கு 2 மகள்களும் ,ஒரு மகனும் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக மனைவி சித்ராவின் நடத்தையில் வீரமணிக்கு சந்தேகப்பட்டு ஏற்பட்டது. இதனால், கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதுபோல் கடந்த வாரமும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால், சித்ரா கோபித்துக் கொண்டு கொளப்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட் டார். குழந்தைகளை வீரமணி பார்த்துக் கொண்டு பள்ளிக்கு அனுப்பி வந்தார்.
தாயாரை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் மகள்களில் ஒருவரான ராஜேஸ்வரி வீட்டில் இருந்த தூக்க மருந்தை எடுத்து குடித்து விட்டாள். இதனால் உடல் நலம் பாதிக்கபட்ட அவளை குன்றத்தூர் அருகே கோவூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு மகளை பார்க்க சித்ரா நேற்று இரவு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது, சித்ராவிடம் வீரமணி வீட்டுக்கு வந்து விடு குழந்தைகளுடன் சேர்ந்து வாழலாம் என்றார். ஆனால், சித்ரா குடும்பம் நடத்த வர மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்தவீரமணி சித்ராவை மருத்துவமனையின் 2-வது மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்தார் சித்ரா.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உடனடியாக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக இறந்தார். இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.