”என் மனைவியை மீட்டுக் கொடுங்கள்”- கரூரில் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியவர் கைது
கரூர்: கரூரில் காணாமல் போன மனைவியை உடனடியாக மீட்டுத்தரக்கோரி மொபைல் டவரில் ஏறி போராட்டம் செய்தவர் கைது செய்யப்பட்டார்.
கரூர்- சேலம் பைபாஸ் சாலையில் தனியார் ஹோட்டல் மாடியில் உள்ள ஒரு செல்போன் டவரில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் 30 வயது தக்க வாலிபர் ஒருவர் திடீரென ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து தகவலறிந்த கரூர் நகர காவல்துறையினர் நிகழ்விடத்துக்கு சென்று அந்த வாலிபரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அரை மணி நேர பேச்சு வார்த்தை பிறகு அவர் டவரிலிருந்து கீழே இறங்கினார்.
அவரிடம் இருந்த கைப்பற்றப்பட்ட கடிதத்தில், "என் பெயர் மருததுரை. நான் கரூர் மாவட்டம், கடவூர் முள்ளி கிராமம் தளிவாசல் என்ற ஊரைச் சேர்ந்தவன். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சங்கீதா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டேன். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி இரவு, மனைவியின் தந்தை முருகேசன் எனக்கு போன் செய்தார். அவரது அண்ணன் இறந்து விட்டதாகவும், மனைவி சங்கீதாவை ஊருக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று சொன்னார்.
உடனே நான், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொட்டவூர் என்ற அவருடைய சொந்த ஊருக்கு என் மனைவியை அனுப்பி வைத்தேன். ஊருக்கு சென்றவுடன் என்னிடம் பேசிய சங்கீதா இரண்டு நாளில் நான் திரும்பி வந்து விடுவதாக கூறினார். அதற்கு பிறகு அவரிடமிருந்து இதுவரை எந்த ஒரு தகவலும் வரவில்லை. மாமனார் முருகேசன் மற்றும் குடும்பத்தாரிடம் போனே செய்து தகவல் கேட்டால் சங்கீதாவை ஊருக்கு அனுப்பி வைத்து விட்டோம் என பொய்யான தகவல் சொல்கின்றனர்.
என் மனைவியை என்னிடம் திருப்பி அனுப்பவில்லை என்றால், நான் தற்கொலை செய்து கொள்வேன்" என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து மருததுரையை கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications