நான் குறிவைக்கப்பட்டுள்ளேன்... என் உயிருக்கு ஆபத்து - ராம மோகன் ராவ் அலறல்
எனக்கு உயிருக்கு ஆபத்து என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட ராம மோகன் ராவ் கூறியுள்ளார். சென்னையில் தனது செய்தியாளர்களிடம் பேசிய ராம மோகன் ராவ், துப்பாக்கி முனையில் தன் வீட்டில் சோதனை நடத்தியதாக கூறியுள்ளார்.
சென்னை: போயஸ்கார்டனுக்கு நெருங்கிய தொடர்புடைய சேகர் ரெட்டி வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் பல நூறு கோடி ரூபாய் பணம், கிலோ கணக்கில் தங்கத்தை கைப்பற்றினர். சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சட்ட விரோதமாக பணம் பறிமாற்றம் செய்யப்பட்டதாக தெரியவரவே அவரை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சேகர் ரெட்டியின் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமையன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். 25 மணி நேரம் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பிய நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு தினங்கள் மருத்துவமனையில் இருந்த ராம மோகன் ராவ் வீடு திரும்பினார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருமான வரி சோதனையின் போது 25 மணி நேரம் சிஆர்பிஎப் போலீசாரால் வீட்டு சிறைக்காவலில் வைக்கப்பட்டதாக கூறினார்.
ஜெயலலிதாவால் நான் பயிற்சி அளிக்கப்பட்டவன்; தமிழகம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் சி ஆர் பி எப் வீரர் வர வேண்டும் என்றால் உள்துறை அமைச்சர் தமிழக முதல்வரிடம் அனுமதி பெற்ற பின்பே வரமுடியும். துப்பாக்கி முனையில் தனது வீட்டில் சோதனை நடைபெற்றது.
நான் யாராலோ குறி வைக்கப்பட்டிருக்கிறேன். என்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது. அம்மா இல்லாத நிலையில் தமிழக மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார். ராம மோகன் ராவ் கூறியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications