என் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே... மேஜர் முகுந்தின் தந்தை கண்ணீர் பேட்டி
சென்னை: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் தன் மகன் வீரமரணம் அடைந்தது பெருமையே என மேஜர் முகுந்த் வரதராஜனின் தந்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் சோபியான் மாவட்டத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ராணுவ வீரர்களும், மூன்று தீவிரவாதிகளும் பலியாகினர்.
பலியான ராணுவ அதிகாரிகளில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர். 31 வயதான அவரது பெயர் மேஜர் முகுந்த் வரதராஜன். அவரது தந்தை பெயர் வரதராஜன். சென்னை தாம்பரத்தில் மனைவியுடன் வசித்து வருகிறார்.

மகனின் வீரமரணம் குறித்துக் கேள்விப்பட்ட வரதராஜன் மற்றும் அவரது மனைவி கீதாவுக்கு உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தார் ஆறுதல் கூறினர். இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தன் மகனின் வீரமரணம் குறித்து பேட்டியளித்துள்ளார் வரதராஜன்.
அதில் அவர் கூறியிருப்பதாவது :-
முகுந்த் பி.காம். முடித்தவுடன் எம்.பி.ஏ. படிக்க வைக்க முடிவு செய்தபோது ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு பணியாற்றப்போவதாக தெரிவித்தான். என் சகோதரிகளின் கணவன்மார்கள் ராணுவத்தில் உள்ளனர். அவர்களை பார்த்து, 3-வது படிக்கும்போதே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான்.
ஒரே மகனை ராணுவத்துக்கு அனுப்புவதில் என் மனைவிக்கு வருத்தம் இருந்தபோதும், முகுந்த் ராணுவத்தில் பணியாற்றுவதில் லட்சியமாக இருந்ததால் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என்னை நன்றாக கவனித்துக்கொள்வான். எனக்கு தைரியம் அளிப்பவனாக இருந்தான். என் மீது மிகவும் அன்பாக இருப்பான். சபரிமலை கோவிலுக்கு செல்லும்போது நானும், அவனும் தான் செல்வோம். என் பின்னால், நான் விழுந்து விடாதவாறு பிடித்துக்கொண்டே வருவான்.
கடந்த 12-ந் தேதி முகுந்துக்கு பிறந்த நாள். பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அன்று காலை அவனை செல்போனில் தொடர்புகொண்டேன். பேசவில்லை. மாலையில் அவனே பேசினான். தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்ததால் போனை எடுக்க முடியவில்லை என கூறினான். அவனுக்கு நானும், எனது மனைவியும் பிறந்தநாள் வாழ்த்து கூறினோம். இது தான் நாங்கள் என் மகனிடம் கடைசியாக பேசியது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் எனது சம்பந்தி டாக்டர் ஜார்ஜ் வர்க்கீஸ் போனில் என்னுடன் பேசி முகுந்த் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக ‘பேஸ்புக்'கில் தகவல் இருப்பதாக கூறினார்.
நான் பெங்களூரில் இருக்கும் மருமகள் இந்துவிற்கு போன் செய்தபோது எடுக்கவில்லை. நேற்று காலை என் மகன் செல்போனுக்கு தொடர்புகொண்டேன். அப்போது யாரும் எடுக்கவில்லை. அதன் பின்னர் என்னை தொடர்பு கொண்ட ராணுவ அதிகாரிகள் முகுந்ந் இறந்த தகவலை தெரிவித்தனர். வேறு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
எனக்கு மகனாக மட்டும் இல்லாமல் தந்தையாக, நண்பனாக இருந்தவன் என் மேல் அன்பு கொண்டவன் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்துள்ளான். அவன் புண்ணியம் செய்தவன்' என கண்ணீர் மல்க தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications